அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் ! தமிழர்களுடைய பண்டிகைகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது சமீப காலமாக அந்நிய சக்திகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. துவக்கத்தில் பொங்கல் விழாவைப் பற்றி புறம் பேசினார்கள். அது அறுவடைத் திருநாள், அறிவின் திருநாள், உழைத்த விவசாயிகளுடைய வியர்வைக்கு வெகுமதி தரும் நாள் என்றெல்லாம் பரப்புரை மேற்கொண்ட பிறகு மதம் சாராத திருநாள் என்கிற வகையில் அனைத்து நாட்டினரும் மதத்தினரும் பொங்கலை ஏற்றுக்கொண்டார்கள். அதுபோல தற்போது தீபாவளி என்பது அவசியமற்றது என்றும், அதைக் கொண்டாடக் கூடாது என்றும், சிறுமதியாளர்கள் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். இதைத்தான் இளங்கோவடிகள், நீரலர் நீரலக் கூறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும் என்று சிலப்பதிகாரத்தில் எடுத்துரைத்தார். ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அது அவரது அறியாமை என்பது இளங்கோவடிகளுடைய விளக்கம். தீபாவளி என்றால் என்ன?. இந்த உலகில் ஆரம்ப காலத்தில் இரவு நேரத்தில் ஒளி தருவதற்கு எந்த ஒன்றையும் நாம் கண்டு பிடிக்காமல் இருந்தோம். குறிப்பாக விளக்கு, மின்சார விளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்கு போன்றவையெல்லாம் இல்லை.